
இந்த ஹாலிவுட் படாதிபதிகளுக்கு உலகத்தை அழித்து அழகுபார்ப்பதே வேலை. அப்படிப்பட்ட படங்களை ஒன்றுவிடாமல் வாய்பிளந்து பார்ப்பது என் வேலை. ஆனால் இதெல்லாம் ரொம்ப அலுத்துப்போய் இனிமேல் இந்த மாதிரி படங்கள் பார்ப்பதில்லை என்று கட்டுண்டிருந்தேன். ஆனால் 2012 ரிலீஸான சில நொடிகளில் சில விமர்சனங்களைப் படித்தேன். Roger Ebert என்பவர் எனக்கு ஏற்றார்போல் விமர்சனங்கள் எழுதுவார். இவரது தர அளவுகோலுக்கு ஹாலிவுட் வட்டாரங்களில் அதிக மரியாதை உண்டு.
அவர் சொன்னது - "You think you've seen end-of-the-world movies? This one ends the world, stomps on it, grinds it up and spits it out". இது படித்த சில மணி நேரங்களில் தியேட்டரில் இருந்தேன். நேற்றுதான் ரிலீஸ் ஆகியிருந்ததால், தியேட்டரில் கொஞ்சம் கூட்டம் இருந்தது.. அதனால் நாச்சோஸ் எதுவும் இல்லாமல், மரியாதையாக சீட்டில் சென்று உட்கார்ந்துவிட்டேன்.
படம் இரண்டரை மணி நேரம்.. போனதே தெரியவில்லை.. வழக்கமான பில்ட் அப்.. வழக்கமான பிரிந்துபோன குடும்பம்.. வழக்கமான அதிபர் மாளிகை.. வழக்கமான சென்டிமென்ட்.. வழக்கமான "கடைசி நிமிட மாட்டிக்கொள்ளுதல்".. அச்சு அசல் ஒரு ஃபார்முலா படம். ஆனால், இந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இருக்கிறதே ! யம்மா !! என்ன ஒரு ப்ரம்மாண்டம். 200 மில்லியன் டாலர்களை இறைத்து, ரிலீஸான ஒரே நாளில் 23 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கக்கூடிய மார்க்கெட் உள்ளவர்கள் மட்டுமே எடுக்கக்கூடிய ரிஸ்க்.
"Earth's crust replacement" என்ற ஒரு உல்லுலாங்க்காட்டியை படம் நெடுக காரணம் காட்டி, இந்த உலகத்தையே தலைகீழாக (நிஜம்மாகவே !) புரட்டி எடுக்கிறார்கள். இந்தப் பூச்சுற்றல் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த உலகம் அழியும் அழகு இருக்கிறதே !! ஆஹா.. அபாரம். தியேட்டரில் எல்லாரும், அடுத்த காட்சியில் என்னென்ன கட்டடங்கள் விழப்போகின்றன.. எந்த முக்கியமான ஸ்தலம் சிதிலமடையப்போகிறது.. எத்தனை பேர் உயிரிழக்கப்போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இனிமேல், நிஜம்மாகவே உலகம் அழிந்தால் கூட.. இந்த அளவுக்கு தத்ரூபமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். "இதெல்லாம் நாங்க முன்னாடியே பார்த்தாச்சு.." என்று காலரை மடக்கிவிட்டுக்கொள்ளலாம்.
இம்மாதிரி படங்களில் நம் எதிர்பார்ப்பை கொஞ்சம் சமன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம், அச்சு அசலாக என்ன நடக்கப்போகின்றது என்று காண்பித்தால் பிசுபிசுப்பாக இருக்கும்.. பேரழிவுக்கு நடுவில் ஒரு குடும்பத்தின் / குடும்பத்தலைவனின் கதை என்பது கலிங்கத்துப் பரணியிலிருந்தே ஒரு சக்ஸஸ் பார்முலா... அது சோடை போனதே இல்லை. இந்தப்படத்திலும் அப்படியே.
நல்ல effect உள்ள தியேட்டராக சென்று ரூபாயைக் கொடுங்கள். இரண்டரை மணி நேரப் பொழுதுபோக்கு - உத்தரவாதம்.
2012
Saturday, November 14, 2009 at Saturday, November 14, 2009 Posted by Keerthi
ஐமேக்ஸ் அனுபவம்
Friday, November 13, 2009 at Friday, November 13, 2009 Posted by Keerthi

இங்கே வந்து கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம் பஸ் பிடித்து சினிமா தியேட்டர் செல்லுவது எப்படி என்று. வீட்டுவாசலில் பஸ் ஏறி சினிமா தியேட்டர் வாசலில் போய் இறங்கிவிடலாம். கொள்ளை விலை என்று சொல்கின்றனர். இன்னும் மல்டிப்ளை செய்யாமல் செலவு செய்கிறேன். அப்படி ஒரு பதினைந்து டாலர்கள் செலவழித்துப் பார்த்த படம், "A Christmas Carol"
வால்ட் டிஸ்னியின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில் பல வித்தியாசங்கள் (புதுமைகள் அல்ல). ஏற்கனவே "The Polar Express" படத்தில் வந்தது போல "Performance Capture" முறையை இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னொன்று 3D. முக்கியமாக IMax. இம்மூன்றினாலும் ஈர்க்கப்பட்டு பஸ்ஸேறி பத்து மைல் கடந்தேன். நம்ம ஊர் சத்யம் மாதிரி 3D கண்ணாடிகளுக்கு இன்னும் அதிகமாக இருபது டாலர் கேட்பார்களோ என்று பயந்தேன். நல்லவேளை, ஒன்றும் கேட்காமல் ஒரு பெரிய கண்ணாடி ஒன்றைக் கொடுத்தார்கள். கண்ணிலிருந்து மேல் உதடுவரை மறைத்து உட்கார்ந்தது கண்ணாடி. மூக்கு கூட வெளியே நீட்டவில்லை என்று நினைக்கிறேன். மரத்தில் மறைந்தது மாமத யானை.
தியேட்டர் எல்லாம் தம்மாத்தூண்டு சைஸில் இருந்தது. அதைவிடக்கொடுமை, ஈ காக்கா இல்லை. ஒரு ஓரத்தில் ஒரே ஒரு வயோதிகர், கஷ்டப்பட்டு டீலக்ஸ் நாச்சோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் இந்தப்படம் 200 மில்லியன் டாலர் செலவழித்து வந்த படம். எந்த லட்சனத்தில் கல்லா கட்டுகின்றனர் என்று புரியவில்லை. நானும் என் பங்குக்கு ஆலப்பினோஸுடன் கூடிய சீஸ் நாச்சோஸை ஒரு கட்டு கட்டினேன்.
ஆனால், இந்த ஐமாக்ஸ் (IMax - Image Maximum) சமாச்சாரம் ஆரம்பமானதும், இரண்டு மணி நேரம் உலகம் மறந்தேன். இந்தப்படத்தின் டைட்டில்கார்டைப் போடும்போது நீங்கள் பறப்பதைப்போல உணர்வீர்கள் - ஐமேக்ஸில் பார்த்தால். கொடுத்த பணத்திற்கான முழு பலனையும் பத்து நிமிடத்தில் அடையலாம். பாக்கிக்கு கொஞ்சம் அரதப்பழைய சார்லஸ் டிக்கன்ஸின் கிருஸ்துமஸ் கதை இருக்கிறது.
பணத்தின்மீது மட்டுமே குறியாக இருக்கும் ஒரு மையப் பாத்திரம். கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு, அவரை சந்திக்கும் மூன்று விதமான பூதங்கள். ஒன்னொன்றும் ஒவ்வொரு காலத்தைக் காட்டி பயமுறுத்தி (சொற்ப சில சமயம் நம்மையும்) க்ளைமாக்ஸில் "மெர்ரி க்ரிஸ்ட்மேஸ்" என்று பாட வைக்கின்ற ஒரு மசாலாப் படம். ஆனால், நீங்கள் குழந்தையாக இல்லாமல், டெக்னாலஜியை ரசிப்பவராக இருந்தால், உங்களை வெகுவாகக் கவரக்கூடிய படம்.
3டி இருந்தால், அதில் சென்று பார்க்கவும். ஐமாக்ஸ் இருந்தால் அவசியம் ஐமாக்ஸில் பார்க்கவும்.
Essential Services
Saturday, November 07, 2009 at Saturday, November 07, 2009 Posted by Keerthi
அமெரிக்காவில் அவ்யுக்தா
Wednesday, November 04, 2009 at Wednesday, November 04, 2009 Posted by Keerthi
ஒரு சில நொடிகளில் தீர்மானமாகிவிட்டது.. நான் அமெரிக்கா கிளம்பவேண்டியது என்று. அதற்கு அடுத்த நொடியிலிருந்து வயிற்றில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. பல நாட்கள் சேர்ந்தார்ப்போல், வீட்டைவிட்டு இருந்தது கிடையாது. சமைக்கத் தெரியாது. துணிதோய்த்தது கிடையாது. அனேகமாக புதிதாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம். எல்லாவற்றையும்விட அம்மா அப்பாவை இனிமேல் சில காலத்துக்கு கம்ப்யூட்டர் திரையின் அந்தப்பக்கத்திலும், செல்போனின் ஸ்பீக்கரின் மறுமுனையில்தான் சந்திக்கமுடியும் என்ற உண்மையை உணரும்போதெல்லாம் அழுகை வந்தது (வருகின்றது). எல்லாவற்றையும் எதிர்கொண்டு கிளம்பிவிட்டேன், அக்கரைக்கு. ஊரே கோலாகலமாக வானத்தில் தீபாவளிக்கோலங்களை பட்டாசுகளில் வரைந்துகொண்டிருக்கையில், புள்ளிகளை இணைக்கும் ஒரு விமானத்தில் ஏறி இனி சிலமாதங்கள் பார்க்க முடியாத சென்னையை, ஜன்னலோர இருக்கை கிடைக்காததால், எட்டிப்பார்த்துக்கொண்டேன். எண்ணங்களை அங்கேயே வட்டமிட வைத்துவிட்டு ப்ரஞ்ஙையில்லாமல் பயணம் தொடர்ந்தேன். பல மணி நேரங்கள், பல மைல் தூரங்கள்..
எல்லாவற்றையும் கடந்துவந்தால், இன்னுமொரு உலகம். நான் பார்த்திராத உலகம்.
இனி.
பயணம்
Tuesday, October 13, 2009 at Tuesday, October 13, 2009 Posted by Keerthi

மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான்
Thus spake
Sunday, October 04, 2009 at Sunday, October 04, 2009 Posted by Keerthi
கம்ப ராமாயணம் - படிக்க முற்படுதல்
Saturday, September 26, 2009 at Saturday, September 26, 2009 Posted by Keerthi
பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
'அழிந்தது, வில்' என, விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள், முப் பகை வென்றார்.
யக்யத்தில் வளர்த்த அக்னியில், நெய்யை ஊற்றி ஆகுதி செய்தவுடன் திகுதிகு என எழும் நெருப்பின் வேகத்தையும் கம்பீரத்தையும் கொண்டு இராமபிரான், வில்லை வளைக்க முற்படுவதற்காக எழுகின்றான். அவன் எழுந்த தோரணையையும், முன்னரே வியந்திருந்த அவன் தோளின் வலிமையையும் உணர்ந்திருந்த விண்ணவர், அந்த சிவதனுசு இவன் கையில் அழியப்போகின்றது என்று ஆர்ப்பரித்து ஆசிகள் மொழிந்தனர். கடைசியில் கூறியிருக்கும் "முப்பகை வென்றார்" என்பதற்கு உள் அர்த்தம் தெரியவில்லை.
உன்னைப்போல் ஒருவன்
Saturday, September 19, 2009 at Saturday, September 19, 2009 Posted by Keerthi

சென்ற வருடம் "A Wednesday" பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.. ஒரு பெரிய ஸ்டார் கேஸ்ட் இல்லாமல், ரொம்பவும் சிக்கலான ஒரு கதையை இலகுவாக நகர்த்திச்சென்று ஒரு ஆச்சரியமான எதிர்பாராத முடிவுடன் நிறைவு செய்திருப்பார்கள். பாட்டு இல்லை.. ஃபைட்டு இல்லை... காமெடி இல்லை.. ஆனாலும் விறுவிறுவென படு சுவாரஸ்யமாக இருந்தது. பலே ! இப்படியல்லவோ கதைக்களம் காண்போரைக் கட்டிப்போடவேண்டும் ? சே ! இப்படி ஒரு படம் தமிழில் வரக்கூடாதா என்று பலபேரிடம் பொருமியிருக்கிறேன்.
மர்மயோகி பல தெரிந்த / சில தெரியாத காரணங்களால் கைவிடப்பட்டு அடுத்து "A Wednesday" படத்தை தமிழில் எடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன், மேலே சொன்ன ஆச்சரியங்களின் "ஆன் தி காண்ட்ராரி"க்கள் என் மனதில் ஓடியது. முக்கியமானது - ஸ்டார் காஸ்ட்.
கமல்ஹாசனும் மோஹன்லாலும் அபாரமாக நடித்துவிடுவார்கள் என்பது ப்ரச்சனை இல்லை.. எப்படி அடக்கி வாசிப்பார்கள் என்பதுதான் ப்ரச்சனை. அதாவது படம் அறிவித்திருந்த நாளிலிருந்து சத்யம் தியேட்டரின் திரையில் டைட்டில் கார்டு போடும் வரை, அந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பும் கொஞ்சமாக தாடியும் வளர்த்துவந்த எனக்கு, மனதோரம் அந்தப் ப்ரச்சனை ஒரு பயமாக ஒட்டிக்கொண்டு இருந்தது.
ஹப்பாடா !...ப்ரச்சனை விட்டது.
படம் சூப்பர் ஃபென்டாஸ்டிக்.
ஒரு கடற்கரையோரத்தில், தன் கடந்தகாலத்தின் மிக முக்கியமான ஒரு நாளை மோஹன்லால் விவரிப்பதில் ஆரம்பிக்கிறது படம். தன் வாழ்வின் ஒரு நாளில் சுனாமி போல மாற்றிய ஒருவனைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போது டைட்டில் போடுகிறார்கள். ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான நரம்பு புடைக்கும் இசையுடன். படம் டைட்டில் முழுக்க ஆங்கிலத்தில்.. ஏனென்று தெரியவில்லை (ஆனால் தமிழ் நாடு அளிக்கும் வரி விலக்கு வாங்கியிருப்பார்கள்). போட்டதில் தவறில்லை.. ஆனால், ஆங்கிலத்தில் வருவது, no fancy.
இப்பொழுது வருகிறது விசில் சத்தம். கமல்ஹாசன் தனது பேஸ்மண்ட் ரூமில் நெருப்பு பொறி பறக்க எதையோ செய்து கொண்டிருக்கிறார். சில நிமிடங்களில் அது பாம் என்று தெரிகிறது.. டைட்டில் முடிவதற்குள் நகரத்தின் முக்கியமான இடங்களில் மர்மமான முறையில் ஒரு பக்கத்தில் வெங்கடாஜலபதியின் படமும் மறுபக்கம் "I Love India" என்ற வாசகமும் இருக்கும் கறுப்புப் பையை ஆங்காங்கே வைத்துவிட்டுக் கிளம்புகிறார். (சென்னை சென்ட்ரலைக் காண்பிக்கிறார்கள்.. அதன் தொடர்ச்சியில் வெளிவரும் ஒரு காவலர் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெளியே நிற்கிறார்.. பிசகு). பின் கூடை நிறைய தக்காளியை வாங்கிக்கொண்டு
பின்னர் சாவகாசமாச் சென்று மார்க்கெட்டில் கூடை நிறைய தக்காளி வாங்குகிறார். கொஞ்ச நேரத்தில் பரபரப்பான நகரததைவிட்டு உயர வாக்கில் தள்ளி கட்டப்பட்டுவரும் ஒரு உயரமான அடுக்கு மாடி கட்டடத்தின் மொட்டைமாடிக்கு வந்து அசால்ட்டாக ஒரு கன்ட்ரோல் ரூமை ரெடி செய்கிறார்.
என்ன நடக்கிறது என்று ஊகித்து முடிப்பதற்குள் ஒரு முக்கியமான தருணம் கடக்கிறது. ஓஹோ ! இந்தப்படத்தில் இவர் ஹீரோ.. இவர் வில்லன்... இது ஒரு வீடு, அது ஆடு அனில் என்றெல்லாம் அறிமுகம் செய்யப்போவதில்லை.. சடாரென்று நேரே கதைக்கு சென்றாகிவிட்டது என்று தெரிந்தவுடன்.. அந்த வேகத்தை உள்வாங்கிக்கொள்ளத் தயாராகிறோம். சீட்டில் கொஞ்சம் கவனமாக உட்கார்ந்துகொள்கிறோம்.
சிறிது நேரத்தில் சென்னையில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் சொல்லும் தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்காவிட்டால் "அமைதிப்பூங்கா"வாக இருக்கும் சென்னை நாசம் செய்யப்படும் என்றும் மிரட்டல்விடுக்கிறார், பெயர் சொல்லாத கமல்ஹாசன். மறுமுனையில் திண்டாடும் ஐ.ஜி.ஆர். மாரார் என்கிற மோஹன்லால், முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தி போனில் மிரட்டும் ஆசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை லட்சுமி வாயிலாகப் பெறுகிறார். இதற்கு நடுவில் அந்த மர்மக் குரலை கண்டுபிடிக்கப் பல அடைவழிகளில் எத்தனிக்கிறார். எதுவும் சோபனமாகாத நிலையில் அந்த மர்மக்குரலுக்குப் பணிந்து தீவிரவாதிகளை தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டு போலீஸ்காரர்களுடன், சோழாவரம் விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கிறார்.
இதற்குப் பின் தான் அந்தக் க்ளைமாக்ஸ். படம் பார்க்காதவர்களுக்கு சொல்லக்கூடாது.. பார்த்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. ஆனால் அந்தத் திருப்பம்தான் கதையின் உச்சம்.
இந்தப் படத்தை அவ்வளவு பாராட்டாமல் நேராக "A Wednesday" படத்தையே பாராட்டலாம் என்று நினைப்பவர்கள், மூலக்கதையையே பாராட்டிவிட்டுப் போகட்டும். என்னதான் வால்மீகி ராமாயணம் எழுதினாலும், தமிழில் கம்பன் எழுதினால் அது கேட்கும்போது எவ்வளவு ஆனந்தம் அடைவோமோ அப்படித்தான் என் மொழியில் ஒரு நல்ல படத்தை ரீமேக் செய்ததை ரசிக்கிறேன்.
மோஹன்லால், கமல் நடித்தது போக படத்தில் எல்லாருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். கேமரா கோணங்களும் நிறங்களும் A-Class. டிஜிட்டல் சினிமேட்டோக்ரஃபியில் கேமராமேன் மனோஜ் பின்னியிருக்கிறார்.
இசை.. விறுவிறுப்பான படத்துக்கு ஸ்ருதிஹாசனின் இசை பக்கபலம். நல்லவேளை, பாடல்கள் இல்லை. (கேசட்டில் இருக்கும் பாடல்கள், வெகு சுமார் ரகம்).
படத்தொகுப்பு - ரமேஷ்வர் பகத். வழக்கமான இன்றைய தமிழ் சினிமா கற்றுக்கொண்ட கௌதம் மேனன் ஸ்டைல் எடிட்டிங்.
கலை - தோட்டா தரணி. "வார் ரூம்" கொஞ்சம் பாஷ் கம்மி. There was a lot of scope, unattended.
இதில் சில விஷயங்கள். படத்தின் கதை சென்னையில் நடக்கிறது என்பது தோன்றவே இல்லை. ( அதிகப்படியான காட்சிகள் ஹைதராபாதில் படப்பிடிக்கப்பட்டதால்).. ஒரு புல்லட்டைத்தவிர எல்லாவற்றிற்கும் AP ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகள். அண்ணா மேம்பாலம், கோயம்பேடு மார்க்கெட் மாதிரி, சென்ட்ரல் ரயில் நிலையம் தவிர எல்லாமே பழக்கப்படாத சென்னை இல்லாத இடங்கள்.
வசனம் - இ.ரா.முருகன். ஐயா ! வெளுத்துவாங்கியிருக்கிறீர்கள். உங்கள் வசனத்தின் தாக்கம் சனிக்கிழமை படம்பார்த்ததிலிருந்து இப்பொழுதுவரை இருக்கிறது.
மோகன்லால், உயிரை பலிவாங்கக்கூடிய ஒரு காரியத்துக்கு ஒரு போலீஸ் ஆபீஸரை நியமிக்கும் போது, வந்த உரையாடலில் என் ஞாபகத்தில் இருப்பது.
"Married ?"
"Yes Sir"
"Child ?"
"Yes Sir. 1 kid"
"Sorry.. I mean, Congrats."
கமல் க்ளைமாக்ஸில் சொல்லும் அத்தனை டையலாகுகளும் க்ளாஸ்.
"நீ என்ன சூப்பர்மேனா ?"
"சூப்பர்மேனா.. நான் என்னை இன்விசிபிள் மேன்னு இல்லே நினைச்சுட்டு இருக்கேன்.. வோட்டுப்போடப்போனா என் பேருல நான்ங்கற ஒருவன் இல்லைன்னு சொல்லிட்டாங்களே !" என்று சொல்லும்போது தியேட்டரில் புரிந்தவர்கள் கைதட்டினார்கள்.
பல உரையாடல்கள் ஆட்சியில் இருப்பவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நக்கலடித்திருப்பது கைத்தட்டல் வாங்கித் தருகிறது.. இன்னும் சிலதடவைகள சென்று சில டையலாகுகளை மனப்பாடம் செய்யவேண்டும்.
இந்தப்படத்தை தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒப்புவதற்கு கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார்கள், வசங்கள் மூலமாக. இருந்தாலும், இந்த தீவிரவாதம் என்பது நம் தமிழ் மண்ணுக்கு இன்னும் (அதிர்ஷ்டவசமாக) உரைக்காத நிலையில் மீனம்பாக்கத்தையும், கோயமுத்தூரையும் அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டிய கட்டாயம் வசனகர்த்தாவிற்கு. "மறதி.. அது இந்த தேசத்தோட வியாதி" என்ற வசனம் உட்பட.
அதே கதை, அதே விறுவிறுப்பு, கிட்டத்தட்ட அதே வசனங்கள், அதே திருப்பம், அதே முடிவு.. சே ! அந்த ஹிந்திப் படத்தை மெனக்கெட்டு முதலில் பார்த்திராமல் இருந்திருந்தால் இன்னும் அதிக அளவில் ஆனந்தப்பட்டிருக்கலாம்.
முதல் முறையாக இந்தக்கதையை தமிழில் பார்ப்பவர்கள் பாக்கியசாலிகள்.
நிற்க.
விறுவிறுப்பான மசாலா இல்லாத சினிமா தமிழில் வெற்றிபெறக்கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். "ரசிகர்கள் அப்படித்தான் விரும்பிப் பாக்குறாங்க" என்று சாக்கு போக்கு சொல்ல முடியாது. புத்தம்புது பென்ஸ் கார்களை கருக வைத்து ப்ரம்மாண்டம் காட்டத்தேவையில்லை.. மரத்தை சுற்றிவந்து பாட்டுப்பாட வேண்டாம். வடிவேலுவை ஊளையிடச்செய்து கிச்சுகிச்சு மூட்டவேண்டாம்.
கதாசிரியருக்கு மட்டும் மகுடம் சூட்டினால் போதும். நல்ல சினிமாவின் ஆட்சி அமோகமாக அரங்கேறும்.
பி.கு :
இந்தப்படமும், இதன் ஹிந்தி ஒரிஜினலும் "Aam Adhmi" என்கிற ஒரு சாதாரணப் ப்ரஜையின் சமுதாயக் கோபத்தை ப்ரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
எனக்கென்னமோ, தீவிரவாதியின் அச்சுறுத்தலைவிட, தண்ணீர் லாரிக்காரனின் அழுச்சாட்டியத்தில்தான் அதிகமாக எங்கள் காமன் மேனின் கோபம் இருக்கும்.
"எவனோ ஒருவன்" பார்த்திருக்கிறீர்களா ?
எனிக்மா
Saturday, August 29, 2009 at Saturday, August 29, 2009 Posted by Keerthi
ஆய பயனென்கொல்
Wednesday, August 26, 2009 at Wednesday, August 26, 2009 Posted by Keerthi

ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டிபோட்டுக்கொண்டு சிலை வைக்கின்றார்கள். நேற்றைய செய்திகளில், மஹாராஷ்ட்ராவில் 300 அடிக்கு சிவாஜி சிலை ஒன்றை 350 கோடி ரூபாய் செலவில் நிறுவப்போகிறார்களாம். பேஷ் ! மேடம் மாயாவதியின் சிலைகளை வைப்பதற்கு கோர்ட் தடைவிதிக்க முடியாது போலுள்ளது. அவர் சிலையை அவரே திறந்துகொள்ளும் இந்த இரண்டாவது படம் என்னுள் சிரிப்பைத் தாண்டி ஒரு அருவருப்பை உண்டாக்கியது.
நம்ம ஊரில் கர்நாடகக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறந்து, அங்கே போய் திருவள்ளுவர் சிலை திறந்து 'புரட்சி' (!) செய்துவிட்டனர். இதனால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதிகபட்சமாக என்னால் யோசிக்க முடிந்த ப்ரயோஜனம் என்னவென்றால் கலவர நாட்களில் சேதம் செய்ய இரண்டு புதிய சிலைகள் கிடைத்துவிட்டன. அவ்வளவே.
சிலைவைப்பதனால் ஆய பயனென்கொல் அச்சிலையின்
தலை கொய்தல் கலவரத்தின் வினையாம்
ஹ்ம்ம்.. இன்னும் என்னென்ன சிலை வைக்கலாம் என்று மல்லாக்காகப் படுத்து விட்டத்தைப்பார்த்தபடியே யோசித்தேன்.
தமிழக மக்களின் நன்மைக்காக, அண்ணா அறிவாலயத்தில் ஒரு அதிமுக சிலையும், அதிமுக செயலகத்தில் ஒரு திமுக சிலையும் ஒருவருக்கொருவர் திறந்துவைத்துக்கொள்ளலாம்.
ஜின்னாவைப் பற்றி பேசி பேஜாராக மாட்டிக்கொண்ட ஜஸ்வந்த் சிங், ஜின்னாவின் சிலையை டில்லியில் எங்காவது திறந்துவைக்க கோரிக்கை வைக்கலாம். அப்படியே பால கங்காதர திலக்கின் சிலையை லாஹூரில் திறந்துவைத்துவிட்டால் இந்தியா-பாகிஸ்தான் ப்ரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று ஐடியா கொடுக்கலாம்.
அதுசரி, சிவாஜி சிலை முன்னூறு அடி என்றால் நாம் தமிழகத்தில் ஏதாவது செய்யவேண்டுமே.. முன்னூற்று ஒரு அடியாவது கட்டியாக வேண்டும். குமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி தான் இருக்கிறது. யோசித்து ஏதாவது செய்வோம்.
பன்றிக் காய்ச்சல்
Sunday, August 16, 2009 at Sunday, August 16, 2009 Posted by Keerthi
சென்னையில் நான் பார்த்தவரையில், பொது மக்கள் அனைவரும் கொஞ்சம் பதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். பேருந்தில் பயணம்செய்யும் ஜன்னலோரவாசிகள் மூக்கை கைக்குட்டையால் மூடியபடியே பயணம் செய்கிறார்கள். சிலபேர் சர்ஜிகல் மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு டாக்டராகவும், நர்ஸாகவும் வலம் வருகிறார்கள். பொது இடத்தில் யாராவது "ஹச் !" என்று தும்மிவிட்டால், சுற்றி இருப்பவர்கள் ந்யூக்லியர் பாம் வந்து பக்கத்தில் விழுந்துவிட்டதுபோல் ரியாக்ஷன் கொடுக்கின்றனர்.
இந்த விழிப்புணர்ச்சி நல்லதுதான். ஆனால் என்ன ஒரு ப்ரச்சனை என்றால், இந்தக் காய்ச்சல் நமக்கு வந்துவிட்டதா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஜலதோஷம், தும்மல், இருமல், காய்ச்சல் எல்லாம் சராசரி இந்தியனுக்கு வருடத்துக்கு நாலு முறை வந்துவிட்டுப் போகிற சமாச்சாரங்கள். இதையே காப்பி அடித்து 'பன்றிக் காய்ச்சலுக்கு' சிலபஸாகப் போட்டதால், குழப்பமாக இருக்கிறது..
என் நண்பர் சொன்னார்.. "சிம்ப்டம்னா பளிச்சுனு தெரியறமாதிரி இருக்கணும். இருமினா கண்ணுல இருந்து ரத்தம் வர்ர மாதிரி.. அப்படி ஒரு யுனீக் சிம்ப்டம் இருந்திருந்தா ஈசியா கண்டுபிடிச்சுடலாம்".. அது சரி !!
குழந்தைகளிடம் இது எளிதாகப் பரவுகிறது என்று டி.வி.க்கள் சொன்னதால், பள்ளி செல்லும் வசதியான குழந்தைகள் எல்லாம் மாஸ்க் அணிந்துள்ளனர். இந்த மாஸ்க் தற்போது விலை ஏறியுள்ளது. பல இடங்களில் இது கிடைப்பதும் இல்லை.. கடும் தட்டுப்பாடு.. நல்ல பிசினஸாக இது மாறியுள்ளது..
Some people die of Swine Flu.. Some people make a living out of it.
ஹ்ம்ம்.. சில விஷயங்களில் இந்தியா உலக நாடுகளோடு அப்-டு-டேட்டாக இல்லாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது. இந்தியா இந்த H1N1 விஷயத்தில் என்ன செய்யவேண்டும் என்ற இந்தச் செய்தி பாஸிடிவ்வாக இருக்கிறது.
எப்படியோ.. எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டு ஷேமமாக இருங்கள்.
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !
இன்னும் உலகை ரசிக்க ஆரம்பிக்காதவர்களுக்கு
Thursday, July 30, 2009 at Thursday, July 30, 2009 Posted by Keerthi
டி.கே.பட்டம்மாள்
Saturday, July 25, 2009 at Saturday, July 25, 2009 Posted by Keerthi
நான் பென்சிலில் வரைந்த டி.கே.பட்டம்மாளின் படம், மேலே காண்பது.
கேட்பது - ஹே ராம் படத்தில் இவர் பாடிய "வைஷ்ணவ ஜனதோ"..
திகட்டா பாடல்கள்
Friday, July 24, 2009 at Friday, July 24, 2009 Posted by Keerthi
ஞான் கந்தர்வன் படத்தில் வரும் "பாலப்பூவே !" - சித்ரா பாடியது. ஆஹா ! என்ன இனிமையான குரல்.
சிம்பிளான சுகமான பாடல் - "தம்பி" படத்தின் "சுடும் நிலவு.. சுடாத சூரியன்"
"டார்ஜீலிங் லிமிடட்" படத்தின் சவுண்ட் ட்ரேக்குகளைத் தேய்த்தபோது அகப்பட்ட சூப்பர் பாடல். - பீட்டர் சார்ஸ்டெட்டின் ப்ரதாப் போத்தன் ஸ்டைல் பாடல்
"மார்னிங் ராகா" படத்தின் ஓப்பனிங் சாங்.. முடிந்தால் டவுன்லோட் செய்து நல்ல எஃபக்டுகளுடன் கேட்கவும்.
முள்
Monday, July 20, 2009 at Monday, July 20, 2009 Posted by Keerthi
கதை
Saturday, July 11, 2009 at Saturday, July 11, 2009 Posted by Keerthi
"நான் சொன்னத நல்லா யோசிச்சுப் பாருங்க.. உங்களை சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி.. " என்று, புகையிலை வாசனை கமழ, அந்த பதிப்பக ஆசிரியர் கூறினார். அவர் பேச ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அவரது பெயரை மறந்துபோயிருந்தேன். இப்பொழுது விடை பெறும்போது தேவைப்படுமோ என்ற அவஸ்தையில் சீனுவாசனா, பத்மனாபனா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அவர் இப்படிச்சொன்னது வசதியாகப்போய்விட்டது. "ரொம்ப சந்தோஷம். நான் வரேன்." என்று அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன்..
வாசலில் ஒரு ஆபிஸ்பாய் என்னைக் கண்டுகொண்டான். "சார்... நான் உங்க விசிறி சார்.. எப்படி சார் இருக்கீங்க.. காகிதத்துல உங்க புக் வெளிவருதா சார் ?" என்றபடி பின்னாடியே வந்தான். பாக்கெட்டில் சில்லறை இருக்கிறதா என்று துழாவிப் பார்த்தேன். என் செய்கையை புரிந்துகொண்டவன் ஆவலாக நின்றான். பத்து ரூபாய் காகிதம் ஒன்று அகப்பட்டது.. அவன் கையில் திணிந்தேன். "எதுக்கு சார் இதெல்லாம்... " என்று கூச்சமில்லாமல் வாங்கிக்கொண்டான். வாசலில் பார்க் செய்திருந்த என் பைக்கை வீட்டுக்கு விட்டேன்.
சாலை முழுவதும் எதிர்காலம் தெரிந்தது. அதன் செர்வீஸ் லேனில் மெதுவாக வண்டியை செலுத்தியபடி யோசித்துக்கொண்டே வந்தேன். எல்லா பெரிய எழுத்தாளர்களும் இப்படிப்பட்ட நிலைகளைக் கடந்துதான் வந்திருப்பார்களோ ? ஆலோசனை அவசியம். புதிதான - புதுவிதமான ஒரு குழப்பம் ஹெல்மெட்டுக்குள் என் தலையை அழுத்தியது. ஆனால், என் அளவில் எனக்கு நண்பர்கள் குறைவு. ஒன்று ரசிகர்களாக இருக்கிறார்கள்.. அல்லது அளவில்லா போதனைகள் கொடுக்கும் அறிவு ஜீவிகளாக இருக்கிறார்கள்.. இரண்டுமே இல்லாமல் தன் வேலை உண்டு, தன் குழந்தைகள் உண்டு என்று என் மனைவி இருக்கிறாள்..
"பக்கத்துவீட்டுக்கு கார்பெண்டர் வந்திருக்காருங்க..." என்று கதைவைத் திறந்துவிட்டு உள்ளே சென்றபடி சொன்னாள். வீட்டுக்குள் வந்தவுடன் நினைவுகள் வேறு ஆடைகளைப் போட்டுக்கொள்கின்றன. எவ்வளவு சீக்கிரம் அதைப்போட்டுக்கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நிம்மதி கிட்டும். துரிதமாக யோசித்தேன்.. எதற்காக நம் வீட்டுக்கு கார்பெண்டர் வரவேண்டும் ? அலமாரிக்கு.. அந்த பழைய செய்தித்தாள்களும், சில பழைய போட்டோ ஃப்ரேம்களும், சென்ற வருடம் வாங்கிய "சிறந்த புதினம்" விருது வீற்றிருக்கும் ஹாலின் அலமாரிக்கு கதவுபோடவேண்டும் என்று போனவாரம் கட்டிலில் புரண்டபடியே சொன்னது ஞாபகம்வந்தது. இந்த வருடமும் விருது வாங்குவேன் என்பது அவளது நம்பிக்கை.
அவள் மோர் கொண்டுவந்து கொடுத்தாள். "நல்ல செய்வாராமா.. ?" என்று கேட்டேன். எனக்கும் அந்த அலமாரிக்கு கதவுபோடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.. கூடவே கடைசியாக எழுதிய புஸ்தகத்தின் மூலம் நல்ல சன்மானம் வந்து இருந்தது. "அவங்க வீட்டுக்கு இவர்தான் செய்யறார்.. ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்தா தானே !!" என்றாள். பக்கத்துவீட்டு அம்மாளும் என் மனைவியும் நல்ல சினேகிதர்கள். அதாவது சினேகிதிகள். தமிழில் பெயர்ச்சொற்களில் அனாவசியமாக வார்த்தைகளில் பால் மற்றும் எண்ணிக்கைகளைக் குறிப்பிடுவது பற்றி கொஞ்சம் எழுதவேண்டும்.
"வரீங்களா ?"
"ம்ம் ?"
"பக்கத்து வீட்டுக்கு.. சார் கூட வீட்டில தான் இருக்கார்.. கார்பெண்டர் கிட்ட பேசலாம்.. அப்படியே.." அலுப்பு தட்டியது. கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. சென்ற வருடம் அந்த விருது வாங்கியதிலிருந்தே கொஞ்சம் கூச்சமாக இருந்தது. ரொம்ப அதிகம் புகழ் இல்லையென்றாலும் அந்த வட்டாரத்தில் முகத்தை பரிச்சயம் கொள்ளும் அளவுக்குப் புகழ் வந்திருந்தது. அதனால் தன்மானம், தன்னடக்கம், தலைக்கனம், தற்பெருமை போன்ற வார்த்தைகளின் இலக்கணங்களை அதீதமாக உணர்ந்து அடக்கிவாசிப்பதாக முடிவெடுத்தேன். வாசலில் மாட்டியிருந்த போர்டை எடுத்தாகிவிட்டது. புகழின் முகவரிக்கு தெருவின் முகவரி தேவையில்லை என்பதை உணர்ந்தேன். பல பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்தேன்.
கொஞ்ச நேர சண்டைக்குப் பிறகு நான் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.. என்னை வெற்றிபெற்ற மனைவி கைதியாக என்னைச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு சென்றாள்.
"வெரி வார்ம் வெல்கம் !!.. " என்று வரவேற்றார் பக்கத்துவீட்டுக்காரர். பக்கத்து வீடாக இருந்தாலும் செருப்பு போட்டுக்கொண்டு வந்த என் போலித்தனத்தை நினைத்து வெட்கமாக இருந்தது. செருப்பை வாசலில் கழட்டிவிட்டு உள்ளே சென்றேன். ஆனாலும் வெட்கம் கூடவே வந்தது.
"உக்காருங்க.. என்ன சாப்பிடறீங்க.." என்று எதற்காக வந்தீர்கள் என்ற தொணியில் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் அவர் மனைவி பதில் சொன்னார். "முரளி நம்ம வீட்டில செஞ்சிருக்கிற இன்டீரியரையெல்லாம் வந்து பாருங்கன்னு கூப்டிருந்தேன்.. பார்க்க வந்திருக்காங்க.. காப்பி சாப்பிடறீங்களா ?" என்று கேட்டார்.
"ஒன்னும் வேண்டாம்.. தாங்க்ஸ் ! இப்பொதான் மோர் குடிச்சுட்டு வரேன்." என்று சொன்னேன். அவர் நம்பிவிட்டார் - நல்லவேளையாக.
"இதோ.. இந்த வால் யூனிட் முரளி பண்ணினதுதான். நம்பகமான பையன். அவ்வளவா காசு வாங்க மாட்டான். கிட்ட போய் பாருங்க.." என்று வற்புறுத்தினார்.
பார்த்தேன். தூரத்திலிருந்து பாப்பதற்கு பாலிஷாக இருந்தது. இதைக் கிட்டத்திலிருந்து பார்க்கவேண்டும் என்றால் எப்படி பரிசோதிக்க வேண்டும் என்று தெரியவில்லை. பாவனைக்குத் தட்டிப் பார்த்தேன்.
"நல்ல மரம் தான்.. ஜே.எஃப்.கே ல இதே குவாலிட்டி தர்டி ஃபைவ் சொல்லுவான்.. எனக்கு டொண்டி டூ ல முடிஞ்சுபோச்சு" என்றார்.
மேலே ஷெல்புகளுக்கு கண்ணாடிக் கதவுகள் இருந்தன.. அவற்றில் போட்டோக்கள் இருந்தன.
"அது என் பொண்ணு.. ஸ்வீடன்ல எம்.எஸ் பண்ணிட்டு இருக்கு.. "
ஒவ்வொரு அலமாரி ஷெல்புக்கும் அவர் விவரிப்பு கொடுப்பாரோ என்று பயந்து "ரொம்ப நல்லா இருக்கு.. நல்லா பண்ணியிருக்கார்.." என்று இருக்கைக்குத் திரும்பினேன்.
"மாடில மரம் அறுத்துட்டு இருக்கான். வரச்சொல்லட்டுமா ?" என்று கேட்டார்.
"ஒன்னும் அவசரம் இல்ல.. வரட்டும்.. வீட்டுக்கு வரச்சொல்லுங்க.. நான் பேசிக்கறேன்.."
"நல்லது.." என்று அமைதிக்கு வழிவிட்டார்.
"மொத தடவையா வந்திருக்கீங்க. கொஞ்சமா காப்பி சாப்பிடுங்களேன்.." என்று மறுபடியும் ஆரம்பித்தார்... என் மனைவி இடைப்பட்ட நேரத்தில் உள்ளே சென்று சினேகிதம் வளர்த்துக்கொண்டிருந்தாள்.
"நோ.. நோ.. இன்னொரு நாள் கட்டாயம் வரேன்.." என்று அவஸ்தையாக நெளிந்தேன்.
"ஹ்ம்ம். உங்க எழுத்தெல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு ?" என்று கேட்டார். இந்தக் கேள்வி பல வார்த்தை வடிவங்களில், பலவித குரல்களில், பலப்பல நோக்கங்களில் என்னை நோக்கி எறியப்பட்டிருக்கின்றன. கேள்வி கேட்பவருக்கு பதிலின் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கேட்கப்படும் கேள்வி இது. இதற்கு மிகச்சிறந்த பதிலை நான் கண்டுபிடித்திருந்தேன்.
முதலில் புன்னகை செய்துவிட்டு "போயிட்டிருக்கு.." என்றேன்.
"நல்லது" என்றார். "அடுத்த கதை ரெடியாயிட்டு இருக்கோ !"
"இனிமேதான்.. யோசிக்கனும்" என்றேன்.
"எப்படி இருக்கு மார்க்கெட் ரியாக்ஷன்." என்று கேட்க, நான் புருவங்களைச் சுருக்கினேன். உண்மையிலேயே எனக்கு ஓப்பன் கொஸ்டின்களின்மீது வெறுப்பு வளர்ந்துகொண்டிருந்தது.
"சாரி.. நான் சேல்ஸ்ல இருக்கேன்.. அதனால, எல்லாத்தையும் கொஞ்சம் அந்த நோக்கத்திலேயே பார்க்கற புத்தி வந்திருச்சு.. புஸ்தகத்துக்கும் எனக்கும் ரொம்பதூரம்." என்றார். அவர் அலமாரியில் பலப்பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததையும் அவரையும் ஒருமுறை பார்த்தேன். இரண்டரை மீட்டர்தான் இருக்கும்.
"ஏன் கேக்கறேன்னா... புஸ்தகங்களுக்கு அவ்வளவா மார்க்கெட் இல்லேன்னு அடிக்கடி பேசிப்போம். குறிப்பா தமிழ் புஸ்தகங்களுக்கு.. என்ன சொல்றீங்க"
"வாஸ்தவம்தான்."
"மார்க்கெட் இல்லேங்கறீங்களா ?"
"அப்படித்தான் தோணுது.. நான் இதுக்கெல்லாம் புதுசு,.. பெரிய எழுத்தாளனாக வரனும்ங்கறது கனவு... அதுக்கான எழுத்து என்கிட்ட இருக்கிறதா நம்பறேன். ஆனா, அந்தக் கனவுக்கும் என் எழுத்துக்கும் நடுவுல இந்த வியாபாரம் இருக்கு."
"உங்க முதல் கதை பப்ளிஷர் யாரு ?"
சட்டென்று புகையிலை வாசனை ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஞாபகம் மூக்கில் உணரப்பட்டதா.. அல்லது அந்த மணத்தை உணர்வதான மயக்கமா என்று தெரியவில்லை.. "காகிதம் பதிப்பகம் அப்படீன்னு..."
"ஓ.. நான் கேள்விப்பட்டிருக்கேன். உங்க அடுத்த கதையும் அவங்கதானா ?" என்று கேட்டார்.
அடுத்த கதை எதைப்பற்றி.. என்ன கதைக்களம் என்றெல்லாம் வந்த பல கேள்விகளிலிருந்து இவர் கேட்கும் கேள்விகள் மாறுபட்டு இருந்தன. சேல்ஸில் இருப்பதாதால் இருக்கும். சேல்ஸ் என்றால் ? என்ன சேல்ஸ் என்று கேட்கவேண்டும்.. என்னைப் பற்றியே கேள்விகள் உழல்வது சங்கோஜமாக இருந்தது.
"அதைப் பத்திதான் இன்னிக்கு பேசிட்டு வரேன்." என்றேன். கொஞ்ச நேரமாக விட்டுப்போயிருந்த மன அழுத்தம் மீண்டும் வந்து வயிற்றில் புகுந்து கொண்டது.
"ஓ.. வெரி குட்.." என்று இன்னும் பதில் எதிர்பார்த்துக் காத்திருந்தார். நான் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் காத்தேன்.
"ஹோப் யூ ஆர் இன் தி குட் புக்ஸ் ஆப் யுவர் பப்ளிஷர்" என்று டபிள் மீனிங்கில் ஹாஸ்யமாகப் பேசியது கொஞ்சம் இதமாக இருந்தது. வாய்விட்டுச் சிரித்தேன். நான் சிரித்தது அவருக்கு உத்சாகம் அளித்தது போலும். மடை திறந்து பேச ஆரம்பித்தார்.
"இப்ப எல்லா மீடியாவுமே விக்கறவன் கையிலதான் சார் இருக்கு..பல சினிமாக்களின் வெற்றி டிஸ்ட்ரிப்யூஷன்லதான் இருக்கு.. என்னதான் க்ரியேட்டிவிட்டி இருந்தாலும் இல்லாட்டாலும் விக்கறவன் புத்திசாலியாயிருந்தா செஞ்சவன் ஜெயிச்சுடறான்"...
"நீங்க சொல்லறது உண்மையா இருக்கலாம்.." என்றேன், மனதிற்குள் யோசித்தபடியே. என் வெற்றிக்கு வேறு யாரையும் கர்த்தாவாக்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதுதான் இறுமாப்போ. இல்லை.. வெற்றியில் சதவிகிதம் பார்க்க முடியாது. அது தவறு.
"அஃப் கோர்ஸ்.. புஸ்தக வியாபாரம் எப்படின்னு தெரியலை.. ஜஸ்ட் க்யூரியஸ்.. அதில் ஜீவனம் நடத்தற அளவுக்கு பணம் வரக்கூடிய புஸ்தகம் எப்படி எழுதுவதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?"
புத்திசாலித்தனமான கேள்விதான். நானும் அதைப்பற்றி யோசித்திருக்கிறேன். இருந்தாலும் யோசித்துவைத்த பதிலை இவருடன் பகிர்ந்துகொள்ள விரும்பாமல், "எனக்கு எழுத்து ஜீவனம் கிடையாது. கனவு. நான் பகல்வேளைகளில் கனவு காண்பது இல்லை. அதற்குத் தான் அஷோக் லீலேண்ட் போறேன்"..என்றேன்.
"ரொம்ப ஸ்வாரஸ்யமா பேசறீங்க".. என்றார். வெடுக்கென்று பதிலளித்துவிட்டோமோ என்ற எண்ணம் வந்தது... கொஞ்சம் பதமாகப் பேசப் பழக வேண்டும்.
"இன்னிக்கு பப்ளிஷரும் இதே மாதிரிதான் கேள்வி கேட்டார்... நான் என்ன மாதிரி கதை எழுதனும்னு ரசிகர்கள் விரும்பறாங்கன்னு கண்டுபிடிச்சு என்கிட்டே சொன்னார்... அந்த மாதிரி கதையோட வாங்க.. அப்படீன்னார்.."
"ஓஹோ !" என்று புருவங்கள் உயர்த்தினார். "அண்டர்ஸ்டாண்டபிள் !" என்றார். அவரால் அந்த பப்ளிஷரின் அலைகளைப் படிக்கமுடிந்ததாகத் தெரிந்தது.
"ஆனா, எனக்கு அப்படித் தோணலை.. என் பேனாவுக்கும் எனக்கும் இடையில் எந்த ரசிகனின் ஆசையும், பப்ளிஷரின் மூக்கும் நுழைவது எனக்குப் பிடிக்கவில்லை"
"நியாயம்தான் சார். எல்லா கலைஞர்களுக்கும் தோணும் இது.. எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பர்.. ரொம்ப நல்லா படம் வரைவார். முதல்ல அவர் படைப்புகளுக்காக அவரைப் பாராட்டினாங்க.. அப்புறம், அவங்க பாராட்டுக்காக இவர் படம் வரைஞ்சார். கடைசியில காசுக்காக முக்கியமான பத்திரிக்கைங்கள்ள படம் வரையரார். எடிட்டர் கூப்பிட்டு இந்தப் பெண்ணோட மார்புப் பகுதி நல்ல விசாலமா வரணும்னு கேக்கறார்.. தொப்புள் தெரியனும்கறார்.. சாரி, க்ராஸா பேசரதா நினைச்சுக்காதீங்க.. அப்படி நடக்குதுன்னு சொல்ல வர்ரேன்.."
"புரியுது" என்றேன். நான் அப்படி இல்லை என்று அவரிடம் இப்பொழுது சொல்லவேண்டும் என்ற உந்துதல் ஒருபக்கம் இருந்தாலும், ஒரு பக்கம் எங்கோ சறுக்கியதாகத் தோன்றியது.
என் மனைவியும் அவர் மனைவியும் சிரித்துக்கொண்டே வந்தனர். நான் வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்தது போல, "போலாமா" என்றேன்.
வாசல் வரை வழியனுப்பி "அடிக்கடி வாங்க." என்றார்.
"வரேன்".
---
வீட்டுக்குள் பல விதமான யோசனைகளை உள்வாங்கிக்கொண்டு வந்தேன். "ஜீவனம்-பணம்-கதை-தெரியுமா" என்ற வார்த்தைகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.
"அவங்க வீடு மாதிரியே வால் யூனிட் பண்ணிடலாமாங்க ?" என்று கேட்டாள்.
"கொஞ்சம் யோசிச்சுப் பண்ணலாம், சிவகாமி." என்றேன், யோசனையோடு.
Requirement Traceability Matrix
Tuesday, June 30, 2009 at Tuesday, June 30, 2009 Posted by Keerthi
சொல்லுதல் யார்க்கும் எளிய.. unfortunately, அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Project Execution
Sunday, June 28, 2009 at Sunday, June 28, 2009 Posted by Keerthi
எண்ணித் துணிக கருமம், coz துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
Risk Management
at Sunday, June 28, 2009 Posted by Keerthi
அஞ்சுவது அஞ்சாமை பேதமை, well, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்..
Rest in peace
Friday, June 26, 2009 at Friday, June 26, 2009 Posted by Keerthi

Born to Amuse
To Inspire, To Delight
Here One Day
Gone One Night
- from Michael Jackson's "Gone too soon"
"ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !"
- திங்கட்கிழமைகளை வெறுக்கும் கீர்த்திவாசன்.
என்ன வயதானாலும், இந்தத் திங்கள்கிழமைகள் வந்தால் வெறுப்பாக இருக்கிறது. எல்லா இனிமையான வாரங்களும் கசப்பான திங்களன்று ஆரம்பிப்பது முரண்.
பள்ளிக்கூடமாக இருந்தால், ஞாயிறு மாலையே ஒருவிதமான சோகம் ஆட்கொள்ளும். திங்களன்று காலை பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டு கொஞ்சம் அதிக நேரம் உள்ளே இருந்துவிட்டுவந்து அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டே "அம்மா ! வயித்தை வலிக்கறது.." என்று சிவாஜி கணேசனின் தேவர்மகன் ஹார்ட் அட்டாக் லுக்கையெல்லாம் இமிடேட் செய்தாலும் "எல்லாம் சரியா போய்டும்.. நீ ஸ்கூலுக்குக் கிளம்பற வழியைப் பாரு" என்று அம்மா கௌண்டர்- அட்டாக் செய்துவிடுவாள். வாழ்வின் அத்தனை சோகங்களும் ஒரே நாளில் என்மீது அழுத்துவது போல அழுகை வரும். துக்கம் தொண்டையை அடைக்க பள்ளிக்கூடம் கிளம்புவேன்.
வயதில் முதிர்ச்சி வர வர, திங்கள்கிழமைகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வரும் என்று நினைத்தேன். ஆனால், அந்த நாள் எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையின் தெளிவுதான் அதிகமாகின்றது. அதுவும் ஒவ்வொரு திங்களும் அதன் கொடுமையின் உக்கிரம் அதிகமாவதை உணர்வது வேதனையின் உச்சக்கட்டம்.
சே !















