Tuesday, October 09, 2007

பிள்ளையார் ப்ளஸ் 2



நாயுடு ஹாலுக்கும் சித்தி புத்தி வினாயகருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால், நாயுடு ஹாலில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று என் அக்கா இதை வாங்கி வந்தாள். வினாயகரை இப்படி ஒரு அக்கேஷனில் நான் பார்த்ததே கிடையாது. அதுவும் இப்படி புஜபலத்தை பைசெப்ஸில் காட்டியபடி...

இந்த ஓவியத்தை வரைந்தவர் - R. சக்திவேல் (ஈமெயில் விலாசம் அகப்படவில்லை). அட்டகாசம் சார். கலக்கிட்டீங்க.

நமது இந்து மதத்தில் பெரும்பான்மையோருக்கு இஷ்ட தெய்வமாக இருப்பவர், நம்ம பிள்ளையார். (பகுத்தறிவுப் பாசறைக்கு ராமர் மட்டும்தான் பிடிக்கும்). இவரை கார்டூன் போடுவது சுலபம். இலகுவாக கிறுக்கினால் கூட ஒருவிதமான டைமென்ஷனில் பிள்ளையார் தோன்றுவார். துதிக்கையையும் நீண்ட விடைத்த காதுகளையும் பார்த்து, நம்மையும் அறியாமலேயே இளம்பிராயத்திலிருந்தே பிள்ளையாரை பலபேருக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது.

வேறு எந்த தெய்வங்களுக்கும் இல்லாதபடி, பல விதமான போஸ்களில் பிள்ளையாரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அனந்தசயனத்தில் பிள்ளையார், கிரிக்கெட் பிள்ளையார், நாஸா பிள்ளையார் என்று அவரவர் அதீத கற்பனையில் புகுந்து விளையாடக்கூடிய ஃப்ளெக்ஸிபிளிட்டி அளிப்பவர், நம்ம கணபதிமட்டும் தான். வேறு யாருக்காவது இதை செய்து பாருங்கள்... அந்த உம்மாச்சி கண்ணைக் குத்தி கடாசிவிடும்.

ஒவ்வொரு தெருமுனையில் ஒட்டியிருக்கும் டைல்ஸ் பிள்ளையாரை ஒன்று விடாமல் கும்பிடுவதில் இருந்து, நம்ம கிரீடம் பட த்ரிஷாவைப்போல் கணபதியை பக்கத்தில் வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவது வரை, பிள்ளையார் பக்தி நம் தமிழ் நாட்டில் வேறுபடும். ஈமெயிலில் பிள்ளையார் சுழி போட முடியாது என்பதால் அந்தப் பழக்கம் மட்டும் வழக்கொழிந்து விட்டது (வீட்டுப்பத்திரங்களில் மட்டும் இன்னும் அவற்றை காணலாம்).

வீட்டில் பூஜைகள் செய்யும் போது, ப்ராண ப்ரதிஷ்டை என்று ஒன்று செய்வதுண்டு (அனேகமாக இவைகளை செய்யும் கடைசி தலைமுறை நாம்தானோ ?). மஞ்சளில் பிள்ளையாரை கோனிக்கலாக (கூம்பாச்சியாக) பிடித்து வைத்து ஆவாகனம் செய்வோம். அவ்ளோ ஈஸி, நம்ம பிள்ளையார். மலை மலையாக பி.ஓ.பி போட்டு பெரிய விக்ரஹம் செய்யவேண்டியது இல்லை. வெறுமன மஞ்சளில் ஒரு கையளவு பிடித்தால் போதும். "என்னடாப்பா ! சௌக்கியமா ?" என்று வந்துவிடுவார், மிஸ்டர் விக்னேஷ்.

பித்துக்குளி முருகதாஸ், ஒரு பஜனை பாடுவார். "ஜெய்கணேச, ஜெய்கணேச, ஜெய்கணேசா ஓடிவா !" என்று. கண்மூடிப் பார்த்திருக்கிறேன், ஓடிவருவது தெரியும்.

1 comment:

மங்களூர் சிவா said...

காலைல ஒரு நல்ல போஸ்ட் படிச்ச திருப்தி.

நல்லா எழுதியிருக்கீங்க.

//
ஈமெயிலில் பிள்ளையார் சுழி போட முடியாது என்பதால் அந்தப் பழக்கம் மட்டும் வழக்கொழிந்து விட்டது (வீட்டுப்பத்திரங்களில் மட்டும் இன்னும் அவற்றை காணலாம்).
//


போட்டு ஆரம்பிக்கலாமே.

இப்பல்லாம் யாருக்கும் லெட்டர் எழுதறதில்ல. ஒரு காலத்தில லெட்டர் எழுத தொடங்கும் போது மொதல்ல

"உ"

அதுக்கு கீழ ஒரு கோடு போட்டுதான் ஆரம்பிப்பேன்.

கம்ப்யூட்டர் வேலைன்னு வந்ததுக்கப்புறம் பேனா புடிக்கிறதே ரொம்ப ரொம்ப குறைஞ்சு போச்சு