Sunday, June 17, 2012

வெய்யத்தாழ !

சென்னையில் இன்று காலை காரோட்டி வந்தது, ஆலப்புழையின் பேக்வாட்டர்ஸில் போஹவுஸில் பயணிப்பதுபோன்ற சுகானுபவம். இன்றைக்கு புதிதாக சென்னை வந்து இறங்கியவர்கள், அவர்கள் போனில்கேட்ட வெய்யில் புலம்பல்களை நம்பப்போவதில்லை. அதுவும் எனக்கு மிகவும் இஷ்டமான திங்கட்கிழமையில் (!) இப்படி ஒரு மந்தாரமான காலைப்பொழுது.. மெல்லிதாக தூரல் போட்டு முடிந்து நான் செல்வதற்காக சென்னை புறவழிச் சாலையை மொழுகித்தயாராக வைத்திருந்தது இயற்கை. அரிசிமாவு புள்ளிக்கோலம் போட்டிருந்தால், திருவைய்யாறு தியாகராஜனின் தேரில் பயணம் செய்த அனுபவம் இருந்திருக்கும். இந்த வழவழப்பான ஒயிலாக வளைந்து செல்லும் அழகான தார்ச்சாலைகள் இன்னுமும் நீளாதா என்ற ஏக்கத்தோடு, கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ஜிலுஜிலு காற்றில் நேற்று வெட்டிய சம்மர் ஷார்ட் கட்டில் தப்பித்த தக்குணூண்டு முடிகள் கொஞ்சமாக அசைந்தபடி அலுவலகத்திற்குப் பயணம். இந்தக் காப்பி குடித்தால் சுறுசுறுப்பாக மூளை இயங்கும் என்பார்களே.. அது எந்த அளவுக்குப் பொய்யோ.. அப்படித்தான், இந்த மாதிரி புத்துணர்வு தரும் climate settingsல் புத்துணர்வு வருவதில்லை (அனேகமாக எனக்கு மட்டும்).. மாறாக இரண்டு கைகளை நீட்டி யேசு நாதரைப்போலே சோம்பல்முறித்தால் அப்பப்பா ! என்ன சுகம். மதியவேளைகளில் தூங்கமாட்டேன்.. "பாடம் !" என்று அம்மாவுக்கு உபநயனத்தில் சத்தியம் செய்ததை மீறும் தைரியத்தைத் தரும் சோம்பல். சோம்பேறித்தனம்போன்ற போதை எதுவுமே இல்லை.

No comments: